முசாபர் நகர்: அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்று இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இந்திய அணியின் தோல்விக்கு ஆறுதல் தெரிவித்தாலும், பலர் தங்கள் ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்ளும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரிதும் நம்பி வந்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளை நிஜமாக்கும் வகையில் தொடர்ந்து வெற்றிகளாக குவித்து இந்திய அணி அதிரடியாக ஆடி வந்தது.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது. இது கிரிக்கெட் ரசிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்தது.
எனவே, தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில், ரசிகர்கள் இந்திய அணியின் போஸ்டர்களைக் கிழித்து எரித்தனர். மேலும் சிலரோ இந்தியா தோல்வியடைந்தது உறுதியானதுடன் அதுவரைப் பார்த்துக் கொண்டிருந்த டிவியைப் போட்டு உடைத்தனர்.
வட மாநிலங்களான அகர்தலா, கயா, புர்னியா, முசாபர் நகர், அவுரங்கபாத், பாட்னா மற்றும் பெகுசராய் உட்பட பல மாவட்டங்களில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதனால் 10-க்கும் மேற்பட்ட டி,வி-க்கள் உடைக்கப்பட்டதாகவும் அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.