டெல்லி: மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை ஆலோசகர் பதவியை இந்திய முன்னாள் சுழல் சாம்பவான் அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக பதவி வகித்தவர் அனில் கும்ப்ளே. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இப்பொறுப்பில் இருந்து வருகிறார். ஆதாயம் தரும் இரட்டை பதவிகளுக்கு எதிராக பிசிசிஐ தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் காரணமாக ஐபிஎல் கட்டுப்பாட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த ரவி சாஸ்திரி, தேர்வு குழு உறுப்பினர் பதவி வகித்து வந்த ரோஜர் பென்னி ஆகியோப் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் அனில் கும்ப்ளேவிடம் இருந்து பிசிசிஐ தொழில் நுட்ப கமிட்டித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
இவருக்கு பதிலாக இந்த பதவி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான கங்குலிக்கு வழங்கப்பட்டது. இந்த கோபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகியதாக தெரிகிறது.
இதுகுறித்து கும்ப்ளே கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக மும்பை அணியுடன் இணைந்திருந்தேன். அப்போது இரண்டு முறை பிரிமியர் கோப்பை, ஒருமுறை சாம்பியன் லீக் கோப்பையும் மும்பை அணி வென்றது. கிரிக்கெட் விளையாட்டில் உள்ள மற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மும்பை அணியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.