சிட்னி: அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்வதற்கு கொஞ்சம் கூட பைட் செய்யவே இல்லை இந்தியா என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் டோணி உறுதியாக போராடவில்லை என்றும் விஷம் கக்கியுள்ளன.
உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 328 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியா 46.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்டது.
இந்த போட்டி குறித்து டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தியில், ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை சேஸ் செய்வதற்கு டோணி, கோஹ்லி போன்றோர் தீவிரமாக பாடுபட்டிருக்க வேண்டும். ஆனால் இருவருமே அதைச் செய்யவில்லை என்று கூறியுள்ளது.
மேலும் அது கூறுகையில், டோணி கிரீஸில் இருந்தவரை இந்தியாவுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அரை இறுதிப் போட்டியை இந்திய கேப்டன் ஈஸியாக விட்டுக் கொடுத்து விட்டார். டோணிக்கு அனேகமாக இதுவே கடைசி ஒரு நாள் போட்டியாக இருக்குமா என்றெல்லாம் அது எழுதியுள்ளது.
சிட்னி மார்னிங் ஹெரால்டு வெளியிட்டுள்ள செய்தியில், டோணியின் 65 ரன்கள் போதுமானதல்ல. அது விசித்திரமான ஸ்கோராகும். கைக்கு எட்டாத வெற்றிக்காக கடுமையாக போராடினார் டோணி. ஆனால் அது போதுமானதாக இல்லை. அவர் ஷான் வாட்சன் பந்தில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்தாலும் கூட கிளன் மேக்ஸ்வெல் டோணியை அருமையாக ரன் அவுட் செய்து விட்டார்.
அணியின் வெற்றிக்காக டோணி அதிகம் சிரமப்பட்டது போலத் தெரியவில்லை என்று விஷம் கக்கியுள்ளது இந்த பத்திரிகை.