எரிச்சல்
எப்போதுமே தாங்கள்தானே மற்றவர்களை கலாய்ப்போம், இப்போது இந்தியாவிலிருந்து ஒருவர் நம்மை கலாய்த்து தள்ளுகிறாரே என்ற ஆதங்கம் ஆஸி. வீரர்களுக்கும், அந்த நாட்டு மீடியா நிருபர்களுக்கும் உள்ளது. அதிலும், கோஹ்லி, ஆஸி. ஆரம்பிக்கும் முன்பே நாக்-அவுட் குத்துகளை விட்டு, அவர்கள் ஆட்டத்தையே முடித்து வைத்துவிடுவதால் கடும் எரிச்சல் அவர்களுக்கு.
கள்ள ஆட்டம்
இப்படித்தான் டிஆர்எஸ் அப்பீல் செய்யும் முன்பாக பெவிலியனை பார்த்து சக வீரர்களிடம் கருத்து கேட்டு கள்ளாட்டம் ஆடிய ஸ்மித்துக்கு எதிராக சீறிய கோஹ்லியை, விமர்சனம் செய்தன ஆஸ்திரேலிய பத்திரிகைகள். ஏமாற்றுக்கார ஸ்மித்தை உத்தமர் போல காட்டின.
நண்பர்கள் இல்லை
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் இனிமேல் ஆஸ்திரேலிய வீரர்களுடன் நட்பு பாராட்ட முடியாது என கோஹ்லி தெரிவித்தார். இதை பள்ளி பிள்ளைகள், நண்பர்களுடன் 'கா' விட்டுக்கொள்வதை போல சுட்டிக் காட்டி வாரியுள்ளன ஆஸ்திரேலிய ஊடகங்கள். கோஹ்லியை சிறுபிள்ளைத்தனமானவர் என்றும், கிளாஸ் வீரர் இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளன.
மீடியாக்கள் சாடல்
சிட்னியிலிருந்து வெளியாகும், டெய்லி டெலிகிராப் பத்திரிகை, கோஹ்லியை ஈகோ பிடித்தவர் என வர்ணித்துள்ளது. மற்றொரு ஹெட்லைனில் கிளாஸ் வீரர் கிடையாது என வர்ணித்துள்ளது அந்த பத்திரிகை. தி ஆஸ்திரேலியன் பத்திரிகையின் பீட்டர் லலோர் எழுதுகையில், விளையாட்டின் ஸ்ப்ரிட் இந்திய அணிக்கு இல்லை. எனவேதான் ஆஸி. கேப்டன் சேர்ந்து பீர் குடிக்கலாம் என அழைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்
ஹெரால்ட் சன் பத்திரிகை நிருபர் ரஸ்சல் எழுதியுள்ள கட்டுரையில், மன்னிப்பு என்ற வார்த்தையை விராட் கோஹ்லி கூற வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் தான் செய்த தவறுகளுக்காக குறிப்பாக முரளி விஜய் பற்றிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார் என்பதை கோஹ்லி புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.