நல்ல பேரை வாங்க வேண்டும்
கோஹ்லி அடுத்த சச்சினாக மாறுகிறாரோ இல்லையோ சச்சின் களத்திலும், களத்திற்கு வெளியிலும் நடந்து கொண்டதைப் பார்த்து முதலில் கோஹ்லி கற்றுக் கொள்ளத் தொடங்க வேண்டும்.
தலைக்கனம் கூடவே கூடாது
தலைக்கனம் மிக்கவராக இருக்கிறார் கோஹ்லி என்பது நீண்ட கால குற்றச்சாட்டு. எனவே அதை சரி செய்ய கோஹ்லி முன்வர வேண்டும். யார் எதைச் சொன்னாலும் அதை பொறுமையுடன் கேட்பதில்லை என்பதும் ஒரு புகாராக உள்ளது. அதையும் அவர் சரிசெய்ய முன்வர வேண்டும்.
தேவையில்லாமல் 'ஷோல்டரை' உயர்த்தக் கூடாது
அதேபோல சக வீரர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் கோஹ்லி. முன்பு கம்பீருடன் மோதினார். பிறகு ஷிகர் தவானுடன் மோதினார். இப்படித் தேவையில்லாமல் "ஷோல்டரை" உயர்த்தி சக வீரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எப்படி கேப்டனாக இவர் சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரியவில்லை.
பத்திரிகையாளருடன் மோதல்
அனுஷ்கா சர்மாவைப் பற்றி எழுதி விட்டார்கள் என்பதற்காக சம்பந்தமே இல்லாத செய்தியாளரைப் பிடித்து கடுமையாக திட்டி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் கோஹ்லி. இந்தியில் மிகவும் அசிங்கமாக அந்த பத்திரிகையாளரை கோஹ்லி திட்டியதாக கூறப்படுகிறது. இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
எழுதியவர் யாரோ.. திட்டு வாங்கியது இவர்
உண்மையில் அந்தக் கட்டுரையை எழுதியவர் இந்த பத்திரிகையாளர் இல்லை. வேறு யாரோ. ஆனால் திட்டு இவருக்குக் கிடைத்துள்ளது.
மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை இல்லையே
இதை கோஹ்லியும் பின்னர்தான் உணர்ந்துள்ளார். ஆனால் அந்தப் பத்திரிகையாளரிடம் அவர் நேரில் மன்னிப்பு கேட்கவில்லை. முன்வரவில்லை. மாறாக, மற்ற பத்திரிகையாளர்களிடம், தான் ஸாரி சொன்னதாக அவரிடம் சொல்லி விடுமாறு கூறியுள்ளார். இதுதான் கோஹ்லியின் பெருந்தன்மை போலும்!
விரல் காட்டுவது, வாயை விடுவது.. எல்லாத்தையும் நிறுத்தனும்!
முன்பு இப்படித்தான் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது தனது நடுவிரலைக் காட்டி அசிங்கமாக நடந்து கொண்டார் கோஹ்லி. இப்போது வாயை விட்டு மாட்டியுள்ளார். இதையெல்லாம் கோஹ்லி நிறுத்த வேண்டும். அப்போதுதான் அவர் முதிர்ச்சி அடைய முடியும்.
பிளேபாய் மற்றும் பேட் பாய்
ஏற்கனவே பிளே பாய் என்ற பெயரை எடுத்த கோஹ்லி இப்போது பேட் பாய் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இது அவருக்கும், அவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கும் நிச்சயம் நல்லதல் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.
சீனியர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவும்
சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் போன்ற சீனி்யர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பார்த்து கோஹ்லி நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும்.
டோணியைப் பாருங்கள்
கேப்டன் டோணியிடமே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. மிகக் கடுமையான சூழலிலும் கூட அவர் அமைதியாக இருக்கக் கூடியவர். நிதானமாக நடந்து கொள்ளக் கூடியவர். அந்தக் குணம் கோஹ்லிக்கும் வர வேண்டும்.
பிசிசிஐ கடிவாளம் போட வேண்டும்
கோஹ்லி தானாக திருந்துவார் என்று காத்துக் கொண்டிருக்காமல், இந்திய கிரிக்கெட்வாரியமும் சற்று கடுமை காட்டி அவரை சரிப்படுத்த முயற்சிப்பதும் நல்லது. மாறாக கோஹ்லி என்ன செய்தாலும் அவர் நல்ல புள்ளையாச்சே, சேச்சே அப்படியெல்லாம் அவர் செய்ய மாட்டார் என்று சப்பைக் கட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
அமைதியை விட வலிமையான ஆயுதம் எதுவும் இல்லை.. கோஹ்லி புரிந்து கொண்டால் நல்லது!