டாக்கா: 4 பந்துகளில் 92 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது ஒரு கிரிக்கெட் அணி என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் இந்த கொடுமை வங்கதேசத்தில் அரங்கேறியுள்ளது.
வங்கதேசத்தில், டாக்கா செகண்ட் டிவிசன் லீக் என்ற பெயரில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று லல்மாடியா கிளப் மற்றும் அக்ஜியோம் கிரிக்கெட்டர்ஸ் அணிகள் நடுவே போட்டி நடைபெற்றது.
முதலில் பேட் செய்த லல்மாடியா கிளப் அணி 14 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதற்கு காரணம், நடுவர்கள் வெண்டுமென்றே செய்த தவறான தீர்ப்புகள்தான் என்பது லல்மாடியா கிளப் அணி நிர்வாகத்தின் எண்ணம். இந்த லீக் முழுக்கவே இப்படித்தான் தங்கள் அணிக்கு எதிராக நடுவர்கள் திட்டமிட்டு நடந்து கொள்வதாக கருதியது அந்த அணி.
இதையடுத்து நடுவர்களுக்கு நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்ய முடிவு செய்தனர் லல்மாடியா வீரர்கள். அக்ஜியோம் கிரிக்கெட்டர்ஸ் அணி பேட் செய்ய வந்தபோது, முதல் ஓவரை சுஜன் மகமத் வீசினார். வேண்டுமென்றே, 13 வைடுகள், 3 நோபால்களை வீசினார் அவர். வைடாக வீசப்பட்ட பந்துகள் பவுண்டரிக்கு போயின. நோபால்களும் அப்படியே. கீப்பர் எதையுமே பிடிக்கவில்லை.
இதனால் வெறும் 4 பந்துகளிலேயே 92 ரன்களை குவித்தது க்ஜியோம் கிரிக்கெட்டர்ஸ் அணி. தாங்கள் வேண்டுமென்றே இப்படி செய்ததாக லல்மாடியா அறிவித்துள்ளது.