துபாய்: நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் நடைமுறைக்கு வெகு காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்திய கிரிக்கெட் வாரியம், தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. நவம்பரில் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். நடைமுறையை சோதனை அடிப்படையில் செயல்படுத்த பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் டி.ஆர்.எஸ். நடைமுறையை ஏற்றுக்கொண்ட நிலையில், பிசிசிஐ பல வருடங்களாகவே முட்டுக்கட்டை போட்டுவந்தது. மோதக்கூடிய இரு அணிகளுமே சம்மதிக்காவிட்டால் டி.ஆர்.எஸ் நடைமுறையை பயன்படுத்த முடியாது. எனவே இந்திய போட்டிகளில் நடுவரின் முடிவே இறுதியானதாக இருந்து வந்தது.
2008ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரின்போது டி.ஆர்.எஸ் நடைமுறையை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு இதுவரை ஒரு போட்டியிலும் இந்தியா அந்த நடைமுறையை ஏற்கவில்லை.
ஐசிசி மற்றும் ஹவ்கேய் அதிகாரிகள், பிசிசிஐ அதிகாரிகளுக்கு, டி.ஆர்.எஸ் பற்றி திருப்திகரமான விளக்கத்தை அளித்து, வீடியோக்களை காண்பித்து, ஒருவழியாக சம்மதிக்க செய்துள்ளனர். டி.ஆர்.எஸ் நடைமுறையிலும் பல குறைபாடுகள் உள்ளதால்தான் அதை எதிர்த்து வந்தது பிசிசிஐ. குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக ஐசிசி உறுதியளித்துள்ளது.