மும்பை: உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.
ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினையை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்து தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 4-ந்தேதி தாக்கல் செய்தது.
அதில், '70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது, கிரிக்கெட் அமைப்பில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை அனுமதிக்கக்கூடாது, ஒருவர் மூன்று முறைக்கு மேல் நிர்வாகியாக தொடரக்கூடாது, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் வாக்களிக்க ஒரு மாநிலத்துக்கு ஒரு சங்கத்துக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்க வேண்டும்' என்பது உள்பட பல்வேறு அதிரடி பரிந்துரைகள் அதில் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே லோதா குழு பரிந் துரைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 6-ம் தேதிக்குள் பிசிசிஐ அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் லோதா குழுவின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு குழுக்கள் அமைத்தல், கிரிக்கெட் வீரர்களுக்கான கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட சில பரிந்துரைகளை மட்டும் பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் வாக்களிக்க ஒரு மாநிலத்துக்கு ஒரு சங்கத்துக்கு மட்டுமே ஓட்டுரிமை, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட மற்ற பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்துவிட்டது.
டெல்லி உள்பட ஒரு சில மாநில கிரிக்கெட் சங்கங்கள், லோதா கமிட்டியின் பரிந்துரைகளால் தங்களுக்கு சில பாதகங்கள் உருவாகும் என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அத்துடன் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தினால் வர்த்தக ரீதியாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.