டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்காக டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பத்திருந்த நிலையில், 21 பேருக்கு நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் தயாரானது.
இதில் முதற்கட்டமாக முன்னாள் இந்திய அணி வீரர்கள் ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, லால்சந்த் ராஜ்புட், பிரவீண் ஆம்ரே, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களான டாம் மூடி, ஸ்டூவர்ட் லா, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆன்டி மோல்ஸ் ஆகியோரிடம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.
நேர்காணலுக்கு வந்தவர்களிடம் பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இன்டர்வியூ நடத்தினர். இந்நிலையில் புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என கோஹ்லியிடம் பிசிசிஐ கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரியா அல்லது அனில் கும்ளேவை பயிற்சியாளராக நியமிக்கலாமா என்று பிசிசிஐ கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், இந்திய அணியின் பயிற்சியார் பதவி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரியிடம், விராத் கோஹ்லி தொடர்பு கொண்டு பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஐபிஎல் போட்டிகளில் விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்ர் பெங்களூரு அணிக்கு டேனியல் வெட்டோரி பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.