மும்பை: இந்திய அணியின் கெளரவத்தைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று விராத் கோஹ்லிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியாளரிடம் அசிங்கமாக நடந்து கொண்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து கோஹ்லியை பகிரங்கமாக எச்சரித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் கோஹ்லிக்கு ஆதரவாகத்தான் கருத்து கொண்டிருந்தது வாரியம். ஆனால் அவமானத்திற்குள்ளான செய்தியாளர் ஐசிசியில் இதுகுறித்து புகார் கொடொடுத்து விட்டார். மேலும் வழக்குப் போடப் போவதாகவும் கூறி விட்டார். இதையடுத்து பிசிசிஐ சற்று சுதாரித்து கோஹ்லியை பகிரங்கமாக கண்டித்துள்ளது.
மார்ச் 3ம் தேதியன்று நடிகை அனுஷ்கா சர்மா குறித்து வெளியான செய்தி ஒன்றுக்காக சம்பந்தமே இல்லாமல் இந்த செய்தியாளரை கடுமையாகத் திட்டி அவமானப்படுத்தினார் கோஹ்லி. இது அனைவரையும் அதிர வைத்தது. நாகரீகமே இல்லாமல் கோஹ்லி நடந்து கொண்ட முறையால் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு எழுந்தது.
இருப்பினும் கோஹ்லி ஆபாசமாக எதையும் பேசவில்லை என்று பிசிசிஐ சப்பைக் கட்டுக் கட்டியது. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும், கோஹ்லி தவறாக நடக்கவில்லை என்று ஒத்து ஊதியது. ஆனால் அந்த செய்தியாளர் ஐசிசியிடம் புகார் கொடுத்து விட்டார். வழக்குப் போடப் போவதாகவும் கூறி விட்டார். இதை பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை
மேலும் பல முன்னாள் வீரர்களும் கோஹ்லி நிதானமாக நடக்க வேண்டும் என்று அறிவுரை கூற ஆரம்பித்தனர். இதனால் இன்று பிசிசிஐ இறங்கி வர வேண்டியதாயிற்று.
இதுகுறித்து பிசிசிஐயின் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுராக் தாக்கூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 2 நாட்களுக்கு முன்பு பெர்ததில் நடந்த சம்பவம் குறித்து வாரியத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. சம்பந்தப்பட்ட வீரர், அணியின் கெளரவத்தையும், மாண்பையும் அனைத்து நேரத்திலும் கட்டிக் காக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோல நடக்கக் கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் செய்திகளை சேகரிக்கும் ஊடகங்கள் மீது பிசிசிஐ மரியாதை வைத்துள்ளது. மதிக்கிறது. விளையாட்டை பிரபலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கை அது மதிக்கிறது, மீடியாவின் ஆதரவையும் அது வரவேற்கிறது.
சம்பந்தப்பட்ட அனைவரும் அடுத்து நடக்க வேண்டியது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்து அனைவரும் கவனம் செலுத்துவோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.