கொழும்பு: முதல் போட்டியில் தோற்று மீண்டு வந்து டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றது பெரிய சாதனையென்றும், இந்த புகழ் இந்திய அணி வீரர்களுக்கு சென்றடைய வேண்டும் என்று கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோஹ்லி கூறியது: முதல் போட்டியில் தோற்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டு அடுத்தடுத்த போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது பெரிய சாதனை. இச்சாதனை முன்பு நிகழ்த்தப்படவில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். இந்த வெற்றியின் புகழ், அணி வீரர்களை சென்று சேர வேண்டும்.
3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறாத வருண் ஆரோன், புவனேஸ்வர், ஹர்பஜன் போன்றோரும் வெளியில் இருந்து எங்களுக்கு ஊக்கம் கொடுத்தனர். அவர்களுக்கும் வெற்றியில் பங்கு உண்டு.
இளம் வீரர்களை கொண்ட ஒரு அணியை வைத்து வரலாற்றை உருவாக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு வீரருமே தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முயலுகின்றனர்.
வீரர்கள் அடிக்கடி காயத்தால் விலகியது எரிச்சலை கொடுத்தது. இருப்பினும், அணி வீரர்களும், அணி நிர்வாகமும் அதை சமாளித்த விதம் புத்திசாலித்தனமானது. மாற்று வீரராகத்தான் புஜாரா களம் புகுந்தார். ஆனால் போட்டியின் முடிவை மாற்றும் ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். கஷ்டம் என்று நினைக்காமல், இதை ஒரு வாய்ப்பாக கருதி புஜாரா ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுபோன்ற மனநிலையைத்தான் உருவாக்க வேண்டும்.