பெங்களூர்: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்ற பெருமை யுவராஜ்சிங்கினுடையது. இரண்டாவது இடத்தை பென் ஸ்டோக்ஸ் பிடித்துள்ளார்.
10வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஏலத்தின்போது, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடிப்படை விலை ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. ஒரு வழியாக புனே அணி பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் ஒரு சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதலாவது வெளிநாட்டு வீரர் இவர்தான் என்பதே அந்த சாதனை. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்ற பெருமை யுவராஜ்சிங்கினுடையது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவர் ரூ.16 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.