லாகூர்: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அஞ்சி பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையே லாகூர் நகரில் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கிரிக்கெட் மைதானத்தின் அருகே மர்ம பொருள் வெடித்து சிதறி, 2 போலீஸ்காரர்களை காயமடையச் செய்துள்ளது.
2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் கிரிக்கெட் வீரர்கள் தப்பினாலும், பாகிஸ்தான் போலீஸ்காரர்கள், வேன் டிரைவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இதன்பிறகு எந்த நாடும் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட செல்லாத நிலையில், ஆறாண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஆடி வருகிறது. அனைத்து போட்டிகளும் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நடக்கின்றன. நேற்று பகலிரவு ஆட்டமாக ஒருநாள் போட்டி நடந்தது. அப்போது ஸ்டேடியத்தில் இருந்து சற்று தொலைவிலுள்ள கல்மா சவுக் பகுதியில் பெரும் வெடிகுண்டு சத்தம் கேட்டது. இதில் 2 போலீசார் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ஊடகங்கள் இதை தற்கொலை படை தாக்குதல் என வர்ணித்தன. ஆனால், அரசோ, இது டிரான்ஸ்பார்மர் வெடித்த விபத்து என்று கூறுகிறது. ஆனால், ஊடகத்தினரை சம்பவ இடத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுப்பதில் இருந்து இது தற்கொலைப்படை தாக்குதலாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மைதானத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் சற்று தொலைவில் குண்டை தீவிரவாதி வெடிக்க செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினர் பீதியடைந்துள்ளனர்.