மெல்போர்ன்: உலக கோப்பை பைனலில் டக் அவுட் ஆன அணி தலைவர் என்ற மோசமான பதிவை இன்று நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் நிகழ்த்தியுள்ளார்.
11வது உலக கோப்பை கிரிக்கெட் பைனல் மெல்போர்னில் இன்று நடந்தது. டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், மார்டின் கப்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஸ்டார்க் மெக்கல்லத்திற்கு வீசிய முதல் பந்திலேயே, மெக்கல்லத்தின் நடுக்கம் தெரிந்தது. லீக் போட்டியில் இதே பந்து வீச்சை அடித்து நொறுக்கிய மெக்கல்லத்திற்கு உலக கோப்பை இறுதி போட்டி என்ற நெருக்கடியை தவிர்க்க முடியவில்லை என்பது தெரிந்தது. ஏனெனில் முதல் பந்தே, ஆப் ஸ்டம்புக்கு மிக அருகில் தாண்டி சென்றது.
2வது பந்தை எதிர்கொள்ளும்போது வழக்கமான பாணியில் பிட்சில் இறங்கி வந்தார் மெக்கல்லம். ஆனால், ஆச்சரியம்.. மெக்கல்லம் பேட்டில் பந்து படவில்லை. அழகாக ஸ்விங் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. மெக்கல்லத்தை நக்கலாக பார்த்தார் ஸ்டார்க்.
நின்று பார்த்தும் பேட்டில் படவில்லை, இறங்கியும் படவில்லையே என்ற குழப்பத்திலேயே 3வது பந்தை சந்தித்தார் மெக்கல்லம். இப்போது கிளீனாக பௌல்ட் செய்தார் ஸ்டார்க். நியூசிலாந்து ரசிகர்களின் இதயங்கள் ஒரு நிமிடம் நின்று துடித்தன. ஏனெனில் மெக்கல்லம்தான் அவர்களின் துருப்பு சீட்டு.
அதேநேரம் ஆஸ்திரேலிய கூடாரத்தில் கூத்தும், கும்மாளமும் எகிறியது. இதில் மோசமான சாதனை என்னவென்றால், உலக கோப்பை இறுதி போட்டியில் டக் அவுட் ஆன ஒரு அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் மட்டுமே.