மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு உடனே தேவை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான். அப்போதுதான் அவர்கள் தங்களின் திறனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இயலும் என்று கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் மிதாலி ராஜ் கூறுகையில், " டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் கிரிக்கெட் விளையாடும் பெண் வீரர்களுக்கு, மக்களின் மத்தியில் அறிமுகம் கிடைக்கும்.
ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் தான் அவர்களுக்கு உடனடி தேவை என நான் நினைக்கிறேன். அதுதான் அவர்களது பொறுமையை சோதித்து, மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவும்.
கிரிக்கெட் ஆணையங்கள், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்லலாம். அது அனைவருக்கும் பழக்கமானது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அதே முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது தரமான வீரர்களை உருவாக்கிட இயலும்." என்று குறிப்பிட்டார்.
முன்னதாக மிதாலி ராஜ் அளித்த பேட்டியொன்றில், மகளிர் அணிகளுக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்தவேண்டும் என்று தெரிவித்து இருந்தார். பல நாட்டு வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகளும் கலந்து பழகி, கிரிக்கெட் நுட்பங்களை அப்போதுதான் கற்றுக்கொள்ள இயலும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.