பெங்களூர்: வெஸ்ட் இண்டீசின் சார்லஸ் பிரத்வைட் இன்று நடைபெற்ற 9வது ஐபிஎல் ஏலத்தில் உருவான திடீர் கதாநாயகன். வெறும் இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய சார்லசை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டா போட்டி போட்ட நிலையில், ரூ.4.20 கோடிக்கு டெல்லி அவரை ஏலத்தில் எடுத்தது, உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு, சார்லசை ஒரே நாளில் பெரிய ஹீரோவாக மாற்றிவிட்டது.
வெஸ்ட் இண்டீசின் சார்லஸ் பிரத்வைட் 2 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒருநாள், 2 டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார். இதுதவிர 37 முதல்தர கிரிக்கெட் போட்டிகள், 26 ஏ-பிரிவு கிரிக்கெட் ஆட்டங்கள், 37 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர் சார்லஸ்.
டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ரன் 69. ஒருநாள் போட்டிகளில் 18 அதிகபட்ச ரன்னாகும். சர்வதேச டி20 போட்டிகளில் நிலைமை இன்னும் மோசம். அவர் இரு போட்டிகளிலும், தலா 1 ரன்தான் எடுத்துள்ளார். முதல்தர மற்றும் ஏ-பிரிவு கிரிக்கெட் ஆட்டங்களில் மட்டுமே அவர் சதம் கடந்துள்ளளார். பிறவகை டி20 போட்டிகளிலிலும் கூட அதிகபட்ச ரன் 36 மட்டுமே.
ஆல்-ரவுண்டரான சார்லஸ், டி20 போட்டிகளில் 1 விக்கெட்டையும், ஒருநாள் போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இவரது ஆல்-ரவுண்டர் திறமையை மதித்துதான் அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வீரர்களுக்கு சம்பளம் கூட தராமல் இம்சை செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு ரூ.4.2 கோடி என்பது பெரிய தொகைதான். ஏலத்தில் எடுத்த தகவல் தெரியவந்ததுமே, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்து டிவிட் செய்துள்ளார் சார்லஸ். ஐபிஎல் தொடரில் ஆடப்போவது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சார்லஸ் கூறியுள்ளார்.