லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நாளைய போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டியாகும்.
பி பிரிவில் உள்ள இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் இந்த 4 அணிகளுக்குமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இவற்றில் ஏதாவது இரு அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
நடப்பு சாம்பியனான இந்தியா இந்தத் தொடரில் தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானை அபாரமாக வென்றது. ஆனால் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 321 ரன்களை குவித்த போதும் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணியின் தன்னம்பிக்கையை நிலைகுலையச் செய்துள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி டக் அவுட் ஆகி ஏமாற்றியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கேப்டனாக விராட் கோஹ்லி ஒருநாள் போட்டியில் கடினமாக சூழ்நிலையை சந்திக்க உள்ளார். நாளைய போட்டியில் கடும் நெருக்கடி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் ஜூன் 7ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆனார். அவரது வாழ்க்கையில் இதுவரை அவர் ஒரு நாள் போட்டிகளில் டக் அவுட் ஆகியதே இல்லை. இதுதான் முதல் தடவை. இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் விராட் கோஹ்லி குறித்து டிவில்லியர்ஸ் கூறுகையில், விராட் கோஹ்லி தலைசிறந்த பேட்ஸ்மேன். மிகவும் எளிமையானவர். நாளைய போட்டியில் அவரது விக்கெட்டை விரைவில் வீழ்த்த முயற்சிப்போம். ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சக வீரராக அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இந்தியாவிற்கு எதிராக எங்களது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சி செய்வோம் என்றார்.
கோஹ்லியும், டிவில்லியர்ஸும் எப்படி ஆடப் போகிறார்கள் என்ற பதைபதைப்பு இருவரது ரசிகர்களிடம் நிரம்பியுள்ளது. என்ன சுவாரஸ்யம் என்றால் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சக வீரர்கள். இப்போது கேப்டன்களாக எதிரும் புதிருமாக களம் காண்கின்றனர்.