கார்டிப்: சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பாக். அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து பேட் செய்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது அந்த அணி. இருப்பினும் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து.
இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் ஓவரிலே சிக்ஸர் அடித்து துவங்கியது. எளிய இலக்கு என்றபோதும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அசார் அலியும், பஃகர் ஜமானும் நிதானமாக விளையாடினர். இருவரும் இங்கிலாந்தின் பந்துவீச்சை பவுண்டரிகளும், சிங்கிள்களும் சீராக விரட்டி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
ஸமான் 57 ரன்களுக்கு ரஷீதின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அசார் அலி 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 37.1 ஒவர்களிலேயே வெற்றி இலக்கைக் எட்டியது. ஹஃபீஸ் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். பாபர் அசாம் 38 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார்.
கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அனிகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால் இன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொந்த மண்ணில் பரிதாப தோல்வியைத் தழுவியது.