சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது..
37 வது லீக் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக வெயின் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரின் இறுதி பந்தில் வெய்ன் ஸ்மித் போல்டாகி ரன் கணக்கைத் தொடங்காமல் வெளியேறினார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடி 52 ரன்கள் குவித்தார். கேப்டன் டோணி 29 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் இறுதியில் சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிக் மேடின்சன் 4 ரன்களும், விராட் கோலி 48 ரன்களும் சேர்த்து வெளியேற, டி வில்லியர்ஸ் 21 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பவிலியன் திரும்பினர்.
19.4 ஓவர்களில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களில் சுருண்டது. இதையடுத்து சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பட்டியலில் 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் இருந்தது. தற்போது சென்னை மீண்டும் முதலிடத்திற்கு ரன் ரேட் அடிப்படையில் தாவியது.