திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் காரைக்குடி காளையை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 5-வது போட்டி திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணியை எதிர்கொண்டது.
இதில், டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.
வி்க்கெட் கீப்பர் கோபிநாத் அதிகபட்சமாக 26 பந்தில் 43 ரன்களும், கேப்டன் சதீஷ் 22 பந்தில் 46 ரன்களும் விளாசினார். காரைக்குடி அணியில் சோனு யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
.@supergillies- Selfie video of today's winning team! @hemangkbadani #TNPL #CSGvKK pic.twitter.com/Rfir15aqd4
— TNPL (@TNPremierLeague) August 28, 2016
பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் காரைக்குடி காளை அணி களம் இறங்கியது. ஸ்ரகாந்த் அனிருதா, எம். விஜய் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அனிருத் 7 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அதன்பின் ராஜ் குமார் உடன் சீனிவாசன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி அதிரடி காட்டவே ஒரு கட்டத்தில் 6.3 ஓவரில் 70 ரன்கள் எடுத்தது காரைக்குடி காளை.
விஜய்குமார் 20 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒன்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சீனிவாசன் 38 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். இறுதியில் காரைக்குடி காளை அணி 17.1 ஓவர்களில் 128 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் அந்தோணி தாஸ் 4 விக்கெட்களையும், அலெக்சாண்டர் 3 விக்கெட்களையும் கைப்பறினர்.