பெஸ்ட் மேட்ச்
இந்தத் தொடரில், டூடி பேட்ரியாட்ஸ் அணி இதுவரை ஆடிய ஆட்டங்களில் மிகச் சிறந்தது எது என்று பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு, ஒவ்வொரு போட்டியிலும், முந்தையதைவிட அதிக திறமையை வெளிப்படுத்தி வந்தன. ஆனால், மிகவும் வலுவான பேட்டிங் உடைய டூடி பேட்ரியாட்ஸ் அணி, பைனலில் சொதப்போ சொதப்பு என சொதப்பியது.
கவிழ்த்த வீரர்கள்
வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள், கவுசிக் காந்தி, 24 , தினேஷ் கார்த்திக், 17, நாதன் 18 ரன்கள் எடுத்தனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அபினவ் முகுந்த், சொல்லிக்கொள்ளும்படி 41 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 144 ரன்கள் மட்டுமே எடுத்தது டூடி பேட்ரியாட்ஸ் அணி.
சேப்பாக்கும் சொதப்பல்
பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஓப்பனர்களும், நாங்களும் செய்வோம் இல்ல என, அவர்கள் பங்குக்கு சொதப்பினர். மிகவும் மந்தமாக விளையாடினர். டேய் இது பைனல்டா என்று மைதானத்தில் இருப்பவர்கள் கத்தியது அவர்கள் காதில் விழவில்லை. கோபிநாத், தலைவன் சற்குணம், 8வது ஓவர்களில், 46 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பொறுமையான ஆட்டம்
டூடி பேட்ரியாட்ஸ் அணியைப்போலவே, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் மிகவும் பொறுமையாக விளையாடினர். 16வது ஓவரின்போது, 4 விக்கெட் இழப்புக்கு, 93 ரன்கள் எடுத்திருந்தனர். அப்போது களமிறங்கிய கேப்டன் சதீஷ். சத்தியமூர்த்தி சரவணன் ஆகியோர், டி20 போட்டியைத்தான் பார்க்கிறோம் என்ற உணர்வை நமக்கு அளித்தனர், அதற்கு முன்பு, கோபிநாத், உருட்டி உருட்டி, அரைசதம் அடித்தார். ஆனால், அது அணியின் வெற்றிக்கு அடித்தளம் இட்டன.
அந்நியனாக மாறிய சரவணன்
கடைசி 12 பந்துகளில், 22 ரன்கள் தேவை என்ற நிலை. 19வது ஓவரை வீசினார் வாஷிங்டன் சுந்தர். 9 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சரவணன் திடீரென அன்னியனாக மாறினார். மூன்று பந்துகளில், இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். 10 பந்துகளில், 23 ரன்கள் எடுத்த சரவணன், ஆட்ட நாயகனானார்.