பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் ஆல்-ரவுண்டர் வீரர்களில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்ற பெருமை தென் ஆப்பிரிக்காவின், கிறிஸ் மோரிசுக்கு கிடைத்துள்ளது. பேட்ஸ்மேன் யுவராஜ்சிங்கிற்கு ஈடாக மோரிஸ் ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சீசன் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்றது. பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பருக்கான ஏலம் முடிந்ததும் ஆல்-ரவுண்டருக்கான ஏலம் ஆரம்பித்தது.
இந்தியாவின் மனோஜ் திவாரி முதலாவதாக ஏலத்திற்கு வந்தார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலத்தி்ல் எடுக்க தயாராக இல்லை. மற்றொரு இந்திய வீரர் இர்பான் பதானை அவருக்கான அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு, புனே அணி ஏலத்தில் எடுத்தது.
இங்கிலாந்தின் ரவி போபாரா, இலங்கையின் திலகரத்னே தில்ஷன் ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் தயாராக இல்லை. இதன்பிறகு தென் ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் பெயர் ஏலம்விடப்பட்டது. அவருக்கு அடிப்படை விலை ரூ.50 லட்சம் என்ற அளவில்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அணிகளோ, அவரை எடுக்கத்தான் போட்டா போட்டி போட்டன.
கடுமையான போட்டிக்கு பிறகு, டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிறிஸ் மோரிசை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. யுவராஜ்சிங்கை ஹைதராபாத் அணியும் இதே தொகைக்கு ஏலம் எடுத்த நிலையில், அதே விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட, கிறிஸ் மோரிஸ் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னி, ரூ.2 கோடிக்கு அவரது அடிப்படை விலையிலேயே பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதையடுத்து ஏலத்தில் விடப்பட்ட ஆஸி. வீரர் மிட்சல் மார்ஷை வாங்கவும் பலே போட்டி நிலவியது. ஒருவழியாக புனே அணி ரூ.4.8 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது.
ஆன்ட்ரியூ டை, டக் பிரேஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், வேன் பர்னல், கிரான்ட் எல்லியட், ஆகியோரையும் வாங்குவதற்கு ஆளில்லை.