ஹராரே: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை, இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் டோணி சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான பாண்டிங் அந்த அணியை முன்னிலையில் நடத்திச் சென்ற கேப்டன்களில் ஒருவர். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது கடினமே. இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வராலாற்றில் அவர் 324 போட்டிகளுக்கு அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். இதன் மூலம் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக அவர் இருந்து வந்தார்.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங்கின் அந்த சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவது டி20 போட்டியில் இந்த சாதனையை டோணி நிகழ்த்தினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை 324 ஆட்டங்களில் டோணி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதன் மூலம் ரிக்கி பாண்டிங் சாதனையை டோணி சமன் செய்துள்ளார். அடுத்து வரும் போட்டியில் கேப்டனாக டோணி செயல்படும் பட்சத்தில், ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிக்கப்படும்.
கடந்த 2007-ம் ஆண்டு டோணி கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகள், 194 ஒருநாள் போட்டிகள், 70 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. 34 வயதாகும் டோணி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்கிறார். டோணி தலைமையிலான இந்திய அணி 27 டெஸ்ட் போட்டிகள், 107 ஒருநாள் போட்டிகள், மற்றும் 40 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
அவரது தலைமையில் இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது. 2011-ம் ஒருநாள் போட்டிகளில் உலகக்கோப்பையையும், 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது. முக்கியமாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கும் முன்னேறியது.
டோணி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 4876 ரன்கள் எடுத்துள்ளார். 278 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 8918 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 71 டி20 போட்டிகளில், 1069 ரன்களை எடுத்துள்ளார். இவ்வாறு இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற அவர் கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சாதனை மேல் சாதனை செய்து இந்திய கிரிக்கெட்டில் சரித்திரம் படைக்கும் நோக்கில் டோணியின் கிரிக்கெட் பயணம் தொடர்கிறது.