கொல்கத்தா: டோணி இனிமேல் விராட் கோஹ்லிக்கு பின் வரிசையில் அதாவது நாலாவது பேட்ஸ்மேனாகவே களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கங்குலி நிருபர்களிடம் கூறுகையில், "டோணி இப்போது போல இனிமேல் 4வது வரிசையிலேயே களமிறங்கட்டும். ஃபினிஷர் என்பவர் 40வது ஓவருக்கு பிறகுதான் களமிறங்க வேண்டும் என்பது தவறான புரிதல்.
விராட் கோஹ்லி மூன்றாவதாக களமிறங்கி பல போட்டிகளை இந்தியாவுக்கு சாதகமாக ஃபினிஷ் செய்து கொடுத்துள்ளார். எனவே டோணி, கோஹ்லியை தொடர்ந்து 4வது வீரராக களமிறங்கி, போட்டியை ஃபினிஷ் செய்து கொடுக்கலாம்.
விராட் கோஹ்லியை மட்டுமே இந்திய அணி நம்பிக் கொண்டுள்ளதாக நான் கருதவில்லை. கோஹ்லி சிறந்த வீரர்தான். ஆனால் இந்திய அணியின் மற்ற வீரர்கள் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது. ராஞ்சியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதற்காக இந்திய அணியை குறைத்து மதிப்பிட தேவையில்லை. நியூசிலாந்தும் நல்ல அணிதான். அவர்களும் சில போட்டிகளில் வெற்றி பெறத்தான் செய்வார்கள். இதில் இந்தியாவுக்கு பின்னடைவு இருப்பதாக கருத தேவையில்லை" என்றார் கங்குலி.