பெங்களூர்: இந்திய வீரர் விராட் கோஹ்லி, உலகின் பலதரப்பட்ட பிட்சுகளிலும், பல்வேறு வகை பவுலர்களுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடி தன் திறமையை நிரூபித்துள்ளார். உலகின் முன்னணி பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தை 27 வயதிலேயே அவர் பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளிலும், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இந்த சீசனிலும் 12 ஆட்டங்களில் விளையாடி 3 சதங்கள், 5 அரைச்சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார்.
இதனால், அவர் பலமுறை ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். இந்நிலையில், தன்னை சச்சினுடன் ஒப்பிடுவது நியாயமற்ற செயல் என்று விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நேர்மையாக சொல்வதென்றால், எனக்கு இது தர்ம சங்கடத்தை உண்டாக்குவதாக உணர்கிறேன். சச்சின் வேறு எவருடனும் ஒப்பிட முடியாதவர். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என்பது எனது முடிவு. பிட்சில் நிற்கும்போது, நான் நானாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர், எனக்கு இன்னும் உத்வேகத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.