மும்பை: இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லெவன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் 15-ஆம் தேதி புனேவில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளன.
இந்த நிலையில் இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து இடையிலான பயிற்சி ஆட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து இந்தியா பேட் செய்தது. தவான், மந்தீப் சிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நிதானமாக ஆடியது இந்த ஜோடி. 24 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த மந்தீப் சிங் வில்லே பந்து வீச்சில் அவுட்டானார். தவான் 84 பந்துகளில், 63 ரன்களில் அவுட்டானார். அம்பத்தி ராயுடு பொறுப்போடு ஆடி, 100 ரன்கள் விளாசி, ஓய்வு எடுத்துக்கொண்டார்.
எதிர்பார்க்கப்பட்ட மறு வரவான யுவராஜ் சிங், 48 பந்துகளில் 56 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 2 சிக்சர்களும் அடங்கும். டோணி, 40 பந்துகளில் 68 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் களத்தில் நின்றார். இதில் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். ஆல்-ரவுண்டர் பாண்ட்யாவும் 4 ரன்களுடன் களத்தில் நின்றார். முன்னதாக சஞ்சுசாம்சன் டக்அவுட்டாகியிருந்தார்
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் இறுதியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லெவன் அணி களம் இறங்கியது. அந்த அணி 48.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து லெவன் அணியில் அதிகபட்சமாக பில்லிங்ஸ் 93 ரன்களும், ராய் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
கேப்டன் என்ற வகையில் டோணி களம் கண்ட கடைசி போட்டி இது. இனி வரும் போட்டிகளில் டோணி விக்கெட் கீப்பராக களம் இறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.