லண்டன்: மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டி லீக் போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
மகளிர் உலக கோப்பையில் இன்று மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியும், ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. டெர்பியில் இந்த போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்தது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக பூனம் ரவுட் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கி சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பூனம் 86 ரன்கள், மந்தனா 90 ரன்கள் குவித்தனர். மந்தனா 72 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் உதவியோடு இந்த ரன்களை குவித்து அசத்தினார். ஆனால் பூனமோ 86 ரன்களை அடிக்க 134 பந்துகளை சாப்பிட்டு டெஸ்ட் மேட்ச் போல ஆடினார்.
இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 73 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியோடு, 71 ரன்களை விளாசினார். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களை எடுத்திருந்தது. ஹர்மந்ப்ரீத் கவுர் 24 ரன்களோடு களத்தில் நின்றார்.
இந்தியாவைத் தொடர்ந்து 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியால் 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பிரான் வில்சன் 81 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 46 ரன்களும் எடுத்தனர்.