கராச்சி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் அனேகமாக இங்கிலாந்தில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இரு பாகங்களாக நடைபெறவுள்ளது. முதல் பகுதியான ஒரு நாள் தொடர் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும். இதையடுத்து அடுத்த ஆண்டு இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இது அனேகமாக் இங்கிலாந்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அங்கு முதலில் ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கான் ஆகியோருக்கு இடையே துபாயில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இலங்கையிலும் இங்கிலாந்திலும் இந்தியா பாகிஸ்தான் தொடரை நடத்துவதற்குத் தேவையான அனுமதியை பெற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. அது கிடைத்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.
இதற்கிடையே, 2017ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து முழுமையான தொடரில் பங்கேற்கும் திட்டமும் தயார் செய்யப்பட்டுள்ளதாம். அதற்கு முன்னோட்டமாக இந்த இரு பாக கிரிக்கெட் தொடரைஇரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நடத்தவுள்ளன.