டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி, தலைமைப் பயிற்சியாளர் போட்டியில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு, நாளை நேர்காணல் நடைபெறவுள்ளது. பயிற்சியாளர் ரேஸில், ரவி சாஸ்திரி, வீரேந்திர ஷேவாக், டாம் மூடி, சிம்மன்ஸ், பைபஸ் மற்றும் ராஜ்புத் ஆகியோர் உள்ளனர். நாளை நடைபெற உள்ள நேர்காணலில் இவர்களில் ரவி சாஸ்திரிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணிக்குப் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து , ரவி சாஸ்திரி, ஷேவாக், டாம் மூடி, பைபஸ், டொட்டா கணேஷ், ராஜ்புத், குளூஸ்னர், ராகேஷ் சர்மா, பில் சிம்மன்ஸ், உபேந்திர பிரம்மச்சாரி ஆகிய 10 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 6 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் கொண்ட குழு நேர்காணல் செய்யும் என்று தெரிகிறது.
இந்நிலையில், கேப்டன் விராட் கோஹ்லிக்கு நெருக்கமான, ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இவருக்கு கடும் போட்டியாளராக ஷேவாக் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஷேவாக், போதிய அனுபவம் இல்லாமல் இருக்கிறார் என்றும் அதனால் அவருக்கு பயிற்சியாளர் பொறுப்பு கிடைக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பயிற்சியாளர் நேர்காணல் குறித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனில் கும்ப்ளேவிடம் கேப்டன் விராட் கோஹ்லி தன் அதிகாரத்தைக் காட்டியதால், இருவருக்கும் இடையே கடந்த போட்டிகளில் முட்டல் மோதல்கள் ஏற்பட்டன. அதனால்தான் ஐசிசி டிராபியில் இந்தியா, பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு நபர் ஒருவர் பயிற்சியாளராக இருந்தால் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியினர் பற்றி நன்கு அறிந்தவர் ஒருவருக்கு பயிற்சியாளர் பொறுப்பு அளிக்கப்பட வாய்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் ரவி சாஸ்திரி, இந்தியா அணி பற்றி நன்கு தெரிந்தவர் என்பதால் அவருக்கே பயிற்சியாளர் பொறுப்புக் கிடைக்கும் என்று தெரிகிறது.