வீட்டுல புலி வெளியில எலி
90களிலும் 2000மாவது ஆண்டின் தொடக்கத்திலும் இந்திய அணிக்கு ஒரு பெயர் இருந்தது. அதுதான் வீட்டுல புலி, வெளியில எலி.. காரணம் இந்தியாவில் அட்டகாசமாக வென்று வந்த இந்திய அணி, வெளிநாடுகளில் கேவலமாக தோற்று வந்தது அப்போது. இந்தியத் துணைக் கண்டத்தில் விளையாட மட்டும்தான் இந்தியா லாயக்கு என்று வெளிநாட்டுக்காரர்கள் கிண்டலடித் சமயம் அது.
வந்தாரய்யா மகாராஜா!
அப்போதுதான் வந்து சேர்ந்தார் கங்குலி. தாதா என்று செல்லமாக அழைக்கப்பட்ட கங்குலி, பேட்டிங்கில் பிரளயத்தை ஏற்படுத்தினார். உலகப் புகழ் பெற்ற வேகப் பந்து வீச்சாளர்களை பிரித்தெடுத்தது அவரது பேட்டிங். பம்மிப் பாய்வது, பயந்து ஓடுவது என்ற கதையே கங்குலியின் பேட்டிங்கில் கிடையாது. எடுத்த எடுப்பிலேயே பிரித்து எடுக்க ஆரம்பித்தார். கூடவே அவரது ஸ்டைலும் சேர்ந்து கங்குலியின் ஆட்டத்தின் பக்கம் உலக ரசிகர்களின் பார்வையைத் திருப்பியது. இந்தியாவும் வெல்ல ஆரம்பித்தது.. வெளிநாடுகளிலும்.
அதிரடி பேட்ஸ்மேன்.. அட்டகாச கேப்டன்
அதிரடி பேட்ஸ்மேனாகவும், அட்டகாசமான கேப்டனாகவும் வலம் வந்த கங்குலி. 113 டெஸ்ட் போட்டிகளில் 7213 ரன்களையும், 311 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 11363 ரன்களையும் குவித்துள்ளார்.
மறக்க முடியாத 11
கேப்டன் கங்குலியின் ராசி எண் 11. உண்மையில் அவர் கேப்டனாக இருந்த 28 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளை வெளியிலிருந்து வென்று அசத்தியவர் கங்குலி. இந்த 11 என்ற எண்ணை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.
லீட்ஸ் கலக்கல்
200ம் ஆண்டு லீட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியை யாரும் மறக்க முடியாது. கங்குலிதான் கேப்டன். ராகுல் டிராவிட் பேட்டிங்கில் ஜமாய்த்துக் கொண்டிருந்தார். இங்கிலாந்து பந்து வீச்சை சமாளித்து ஆடி வந்தார். டிராவிட் அட்டகாசமாக ஆடி 148 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் சச்சின் 193 ரன்களைக் குவிக்கி கங்குலி 128ரன்களைப் போட இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 628 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.
பாலோ ஆன்
இந்திய பந்து வீச்சாளர்களும் தங்களது பங்குக்கு இங்கிலாந்து பேட்டிங்கை புரட்டி எடுத்து பாலோ ஆன் வாங்க விட்டனர். இறுதியில் இந்தியா இன்னிங்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா 16 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற முதல் வெற்றி அது.
ஆஸிக்கும் அதே அடி
அதேபோல ஆஸ்திரேலியாவையும் ஒரு கை பார்த்தவர் கங்குலி. ஆஸ்திரேலியாவில் இந்தியா வெற்றி பெறுவது என்பது மிகப் பெரிய சமாச்சாரமாக இருந்த காலம் அது. 2003-04 தொடரில் அதை மாற்றினார் கங்குலி. பிர்ஸேப்ன் டெஸ்ட்டில் அவர் போட்ட 144 ரன்களால் அப்போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா தோல்வியிலிருந்து தப்பி வரலாறு படைத்தது.
அடிலைட் அமர்க்களம்
அடிலைட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 556 ரன்களைக் குவித்தது. ஆனால் இந்தியா பதிலடி கொடுத்தது. வி.வி.எஸ். லட்சுமண் 148 ரன்களையும், டிராவிட் 233 ரன்களையும் குவிக்க இந்தியா 523 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் பின்னர் வந்த அஜீத் அகர்கரின் பந்து வீச்சு ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கியது. 6 விக்கெட்களை அள்ளினார் அகர்கர். ஆஸ்திரேலியா 196 ரன்களுக்குத் தூக்கி வீசப்பட்டது. அந்த டெஸ்ட் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த முதல் வெற்றி அது. அந்தத் தொடரையும் கூட 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது.
மறக்க முடியாத மகாராஜா
இப்படி இந்தியாவுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்த சாதனைக்குரியவர் கங்குலி. அவரது வீட்டில் செல்லமாக அவரை இளவரசரே என்றுதான் கூப்பிடுவார்கள். ஆனால் ஜெப்ரி பாய்காட்தான் அவரை பிரின்ஸ் ஆப் கொல்கத்தா என்று மாற்றிக் கூப்பிட்டார். பின்னர் இது மகாராஜ் என்று மாறிப் போனது.
கொல்கத்தாவின் பெரிய பணக்கார குடும்பம்
கொல்கத்தாவின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று கங்குலி குடும்பம். அவரது தந்தை மிகப் பெரிய அளவில் பிரிண்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கங்குலி கூட்டுக் குடித்தனத்தில் வசிக்கிறார். அவரது வீட்டில் மொத்தம் 30 பேர் வசிக்கிறார்கள். இவர்களுக்காக 45 அறைகள் உள்ளன.
வலதுசாரி + இடதுசாரி
கங்குலி வலது கை பழக்கம் கொண்டவர்தான். ஆனால் பேட்டிங்கின்போது மட்டும் இடது கையில்தான் பேட் செய்வார். இதற்குக் காரணம் அவரது அண்ணன் ஷ்னேஹஷிஸ் கங்குலிதான் காரணம். அவர் இடது கை பேட்ஸ்மேன். அவரைப் பார்த்து கங்குலியும் இடது கையில் பேட் செய்ய ஆரம்பித்து அதுவே பழகி விட்டது.
உதைக்கப் பிடிக்கும்
கங்குலிக்கு கால்பந்துதான் மிகப் பிடிக்குமாம். கிரிக்கெட்டுக்கு அடுத்து அவரது காதல் கால்பந்து மீதுதான். கால்பந்து போட்டி என்றால் உட்கார்ந்து விடுவார். முடியும் வரை நகர மாட்டார்.
ஓடிப் போய் காதல் மணம்
கங்குலியின் மனைவி டோனா, அவரது காதல் மனைவி ஆவார். இங்கிலாந்து டூரை வெற்றிகரமாக முடித்து விட்டு கங்குலி வந்த பிறகு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இரு குடும்பமும் சமரசமாகி ஒன்று சேர்ந்து விட்டனர்.