கொல்கத்தா: தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போனதற்கு நான் தான் காரணம் என்று ரவி சாஸ்திரி நினைத்தால் அவர் முட்டாள்களின் உலகில் வாழ்வதாக கங்குலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் நேர் காணல் சமீபத்தில் நடைபெற்றது. 57 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ரவி சாஸ்திரி, கும்ப்ளே, வெங்கடேச பிரசாத் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், நேர் காணலின்போது, சச்சின், லட்சுமணன் உள்ளிட்டோர் அடங்கிய கிரிக்கெட் அறிவுரை வழிகாட்டு குழுவில் இடம் பெற்றிருந்த கங்குலி மட்டும் ஆப்சென்ட் ஆகிவிட்டார். எனவே ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படாததற்கு கங்குலிதான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.
இதுகுறித்து டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ரவி சாஸ்திரி, தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார். மேலும், இந்திய பயிற்சியாளர் நேர் காணலின்போது தன்னை சவுரவ் கங்குலி அவமரியாதை செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். கங்குலி தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பொறுப்பான பதவியில் இருப்பவர் அந்த பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள கங்குலி, தன் மீது ரவி சாஸ்திரி வைப்பது தனிநபர் தாக்குதல் என்றார். மேலும் அவர் கூறுகையில், தலைமைப் பயிற்சியாளராக அவர் தேர்வு செய்யப்படாததற்கு நான் பொறுப்பு என்று அவர் நினைத்தால், ரவி சாஸ்திரி முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றே நான் கூற வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட குழுவில் அவரே 10 ஆண்டுகளாக இருந்திருக்கிறார் எனும்போது அவருக்கு தெரிந்திருக்கும் இதனால்தான் அவரது கருத்து ஏமாற்றமளிக்கிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் போது, அவர் நேரில் வராமல் பாங்காக்கில் விடுமுறையைக் கழித்துக் கொண்டு கேமராவில் தனது நேர்காணலை செய்திருக்கக் கூடாது. குறிப்பாக இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நேர்காணலில் இருந்தார்.