திண்டுக்கல்: சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்தார்.
திண்டுக்கல் நத்தத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா நேரில் கண்டு களித்தார். முன்னதாக சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலில் உள்ள வேலம்மாள் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட சுரேஷ் ரெய்னா, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனிடையே சுரேஷ் ரெய்னா கூறியதாவது: டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில், கடின உழைப்பு மிகவும் முக்கியமானது. டி20 போட்டிகளில் ஒரு வீரராக தடம் பதிக்க வேண்டுமானால், தொடர்ந்து சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
ஃபீல்டிங்கில் இருக்கும் போது எப்போதும் பந்து நம்மை நோக்கி வருகிறது என்று நினைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஃபீல்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்யும் போது தான் அதில் சிறப்பாக செயல்பட முடியும். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு ஃபில்டிங் செய்வதில் ஆர்வம் அதிகம். அதனால் எப்போதும் ஃபில்டிங்கில் இன்னும் திறமையை வளர்க்க விரும்புவேன்.
பேட்டிங்கை பொறுத்தவரையில், வழக்கமான நான் 6-வது வீரராக களம் இறங்குவதால் ரன் குவிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் நான் 3-வது வீரராக களம் இறங்குவதால் அதிக ரன்களை குவிக்க முடிகிறது. துலிப் டிராபியில் மின்ஒளியில், பிங்க் நிற பந்தைக் கொண்டு விளையாடுவது சவால் நிறைந்தது.
டிஎன்பில் தொடர் நடத்துவது அற்புதமான முயற்சி. இந்த தொடர்களை நடத்துவதன் மூலம், வீரர்கள் சிறந்த அனுபத்தை பெறுவதோடு, தங்களது திறமையை வெளிப்படுத்தும் தளமான இதனை பயன்படுத்திக்கொள்ள முடியம். மேலும், டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் சில வீரர்கள் அடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற முடியும்.
எனது கிரிக்கெட் வாழ்வுக்கு உறுதுணை பெற்றோர் மற்றும் நண்பர்கள்தான். மைதானத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் மனைவி, குழந்தைகள் தான் எனக்கு உலகம் என்று கூறினார்.
தற்போது துலிப் டிராபி போட்டியில் விளையாடிவரும் அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.