துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ட்வைன் பிராவோ ஆகியோர் தலா 20 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் பெற்றதாக லலித் மோடி அனுப்பிய கடிதத்தை பி.சி.சி.ஐ யின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு அனுப்பி வைத்ததாக ஐ.சி.சி. கூறியுள்ளது.
சென்னை அணியை சேர்ந்த 4 வீரர்களுக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பிருப்பதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித்மோடி அவ்வப்போது கூறி வந்தாலும், இதுவரை வெளிப்படையாக பெயரை வெளியிட்டதில்லை. இந்நிலையில் ஐ.சி.சி.க்கு அவர் எழுதிய கடிதத்தை ட்விட்டரில் நேற்று முன்தினம் வெளிப்படையாக வெளியிட்டார்.
அக்கடிதத்தில், பா திவான் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் இந்த 3 வீரர்களும் ரூ.20 கோடி அல்லது அதற்கு இணையான அடுக்குமாடி குடியிருப்பை லஞ்சமாக பெற்றதாக கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம், ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு லலித் மோடி, கூறியுள்ளார்.
இதற்கிடையே லலித் மோடி, ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதத்தை உடனடியாக பி.சி.சி.ஐயின் ஊழல் தடுப்பு பிரிவின் பார்வைக்கு அனுப்பி விட்டதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றதாக பிசிசிஐ கூறியிருந்தாலும், குற்றச்சாட்டின் முடிவு என்ன என்பதை இதுவரை பிசிசிஐ ஏன் அறிவிக்கவில்லை என்பது மர்மமாக உள்ளது.
தற்போது அந்த கடிதத்தை லலித் மோடி வெளியிட்ட பின்னர், இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் பீகார் கிரிக்கெட் சங்கச் செயலாளர் ஆதித்யா வர்மா, இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. எடுத்த நடவடிக்கை குறித்து அறிய கிரிக்கெட் உலகம் ஆவலாக இருப்பதாக ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியுள்ளார்.