லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இனிமேல் கைவிட்டுவிடலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 1998ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 2006ம் ஆண்டுவரை, 2 வருடங்களுக்கு ஒருமுறையும் பிறகு சுமார் 4 வருடங்களுக்கு ஒருமுறை இப்போட்டித் தொடர் நடைபெற்று வந்தது.
கடந்த 2013ல் நடைபெற்ற போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. நடப்பாண்டில் இரு தினங்கள் முன்பு நிறைவடைந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் ஆனது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நீக்கிவிட ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பையை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான கிரிக்கெட்டை ஆட வைக்க முடியாது என்பதால் அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த ஐசிசி டி20 உலக கோப்பை ரத்து செய்யப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு சாம்பியன்ஸ் டிராபியை நீக்கிவிட ஐசிசி முடிவு செய்துள்ளது. ஏனெனில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரும், டி20 உலக கோப்பை தொடரும் போதும் என ஐசிசி நினைக்கிறது. அதேநேரம், 2021ல் இந்தியாவில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படவில்லை.