டெர்பி: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும் மோதின.
மழை காரணமாக ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான மந்தனா 6, பூணம் ரவுட் 14 என சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 36 ரன்களில் போல்ட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய கவுர், ஷர்மா கூட்டணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தது. இதற்கிடையில் ஷர்மா 25 ரன்களில் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சாதனை படைத்தார். கிருஷ்ணமூர்த்தி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் இந்தியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால், முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை அந்த அணி இழந்து தடுமாறியது.
இருப்பினும் இறுதி வரை போராடிய பிளாக்வெல் அதிகபட்சமாக 90 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 40.1 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியா, நாளை மறுதினம் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.