நேப்பியர்: உலக கோப்பையில் நாளை இரு போட்டிகள் நடைபெற உள்ளன.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும், நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நாளை மோதுகின்றன. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
பாகிஸ்தான் இதுவரை ஆடிய போட்டிகளில் ஜிம்பாப்வேயிடம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே அடுத்தடுத்த போட்டிகள் அனைத்திலும் அது வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு செல்ல முடியும்.
அதே நேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, இதுவரை ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை. இந்தியாவுக்கு எதிராக அந்த அணி மிக மோசமாக விளையாடி தோல்வியுற்றது. இருப்பினும் அதற்கு முந்தைய போட்டிகளில் எமிரேட்ஸ் சிறப்பான பங்களிப்பை தந்தது. எனவே, தடுமாறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு , எமிரேட்ஸ் அணி கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மற்றொரு போட்டி பெர்த் மைதானத்தில் நாளை பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. குரூப் ஏ பிரிவிலுள்ள ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் ்தில் மோதுகின்றன. ஆஸ்திரேலியா இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோல்வியடைந்துள்ளது. வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியில் இருந்து வெளியே வந்து ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இப்போட்டியில் வென்றால்தான் ஆஸ்திரேலியாவால் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அதேநேரம், கடந்த போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. எனவே இந்த போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.