தரம்சாலா: தரம்சாலாவில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஏற்கனவே நடைபெற்ற 3 டெஸ்டுகளில் தலா 1 டெஸ்டில் இரு அணிகளும் வென்றிருந்தன. ஒரு டெஸ்ட் டிராவானது. எனவே இந்த டெஸ்ட் போட்டிதான் தொடரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்ுகம் போட்டியாக அமைந்திருந்தது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் அடித்தார். இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர், முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 332 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
32 ரன்கள் பின் தங்கிய நிலையில் நேற்று உணவு இடைவேளைக்கு பிறகு, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நேற்று மாலைக்குள், 137 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு 87 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியை வெல்லலாம் என்ற வாய்ப்புடன் இன்று ராகுலும், விஜயும் பேட்டிங்கை தொடர்ந்தனர்.
இருப்பினும் முரளி விஜய் இந்த போட்டியிலும் ரன் குவிக்க முடியவில்லை. 35 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் கீப்பர் வேடிடம் கேட்ச் கொடுத்து அவுட்ஆனார். நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா, 5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத நிலையில் மேக்ஸ்வெல்லாம் ரன்அவுட் செய்யப்பட்டார். 46 ரன்களில் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததால் ஆஸ்திரேலிய அணியினர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இந்திய ரசிகர்கள் தலையில் கை வைத்தனர்.
அதேநேரம், களமிறங்கிய கேப்டன் ரஹானே, 'கவுன்டர் ஷாட்டுகளை' ஆட ஆரம்பித்தார். இதனால் கட்டுப்பாடு இந்திய அணியின் பக்கம் வந்தது. பேட்கம்மின்சின் பவுன்சர்களை லெக்சைடிலும், ஆப்சைடிலும் அடுத்தடுத்து சிக்சர்களாக மாற்றி விஸ்வரூபம் காட்டினார் ரஹானே. ஆடிப்போயினர் ஆஸ்திரேலிய அணியினர். இந்த அதிரடியால் ஆட்டத்தின் கட்டுப்பாடு இந்திய அணி பக்கம் வந்தது.
24வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. கே.எல்.ராகுல் 51 ரன்களுடனும், ரஹானே 27 பந்துகளில் 38 ரன்களுடனும் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தனர்.