கொழும்பு: காலே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் இலங்கை அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
முன்னதாக முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 600 ரன்களை அதிரடியாகக் குவித்தது. இதனை தொடர்ந்து, நேற்று விளையாட தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே சிக்கல் ஏற்பட்டது.
முகமது சமி, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை, இலங்கை வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால், இன்றைய மதிய உணவு இடைவேளை வரை மட்டுமே இலங்கை வீரர்கள் களத்தில் நின்றனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், 9 விக்கெட்களையும் இழந்து 291 ரன்களில் இலங்கை ஆல் அவுட் ஆனது. ஏற்கனவே குணரத்னே காயம் காரணமாக, ஓய்வில் உள்ளதால் அவர் பேட்டிங் செய்யவில்லை.
தற்போதைய நிலையில், இந்திய அணி 309 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து, 2வது இன்னிங்சை இந்தியா விளையாட தொடங்கியுள்ளது. தேவையான ரன்களை குவித்துவிட்டு உடனே இலங்கையை விளையாட வைத்து, சொற்ப ரன்களில் வெற்றிபெறுவதே, இந்தியாவின் இலக்காக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.