கொழும்பு: இந்தியா, இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சுவாரஸ்யமாகியுள்ளது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 312 ரன்களுக்கு இழந்த நிலையில், இலங்கை தனது முதல் இன்னிங்ஸை 201 ரன்களுக்குப் பறி கொடுத்தது. ஆனால் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து விட்டது இந்தியா.
இப்போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. தனது முதல் இன்னிங்ஸை மழை காரணமாக தடுமாற்றத்தோடு தொடங்கிய இந்தியா, சட்டேஸ்வர் புஜாரா மற்றும் அமித் மிஸ்ராவின் உபயத்தால் ஸ்டெடி செய்து 312 ரன்கள் எடுத்து இன்று ஆட்டமிழந்தது.
சட்டேஸ்வர் புஜாரா சிறப்பாக ஆடி 145 ரன்களைக் குவித்தார். 289 பந்துகளைச் சந்தித்த அவர் 14 பவுண்டரிகளுடன் இந்த ஸ்கோரை எடுத்தார்.
அதேபோல அமித் மிஸ்ரா சிறப்பாக ஆடி 7 பவுண்டரிகளுடன் 59 ரன்களைக் குவித்து புஜாராவுக்கு நல்ல பார்ட்னராக திகழ்ந்தார். இறுதியில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 312 ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் தம்மிக பிரசாத் 4 விக்கெட்களையும், ஹெராத் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆட வந்த இலங்கைக்கு இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் ஷாக் கொடுத்து கலங்கடித்து விட்டனர். குறிப்பாக இஷாந்த் சர்மா பிரமாதமாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன. இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 201 ரன்களில் சுருண்டு போனது.
இஷாந்த் சர்மா 5 விக்கெட்களையும், அமீத் மிஸ்ரா மற்றும் பின்னி ஆகியோர் தலா 2 விக்கெட்கையும் சாய்த்தனர்.
இதையடுத்து 111 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது 2வது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆனால் அதிரடியாக விக்கெட்கள் சாயத் தொடங்கின. 7 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்தது இந்தியா. முதல் இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா இந்த இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார். ராகுல் 2, ரஹானே 4 என அவுட் ஆகி வெளியேறினார்.