பர்மிங்காம்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டி விட்டது. முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரை இறுதியில், 'பி' பிரிவில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியா, 'ஏ' பிரிவில் 2-வது இடத்தை பெற்ற வங்காளதேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா, 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனால் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதால், இந்திய அணி நம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இலங்கையுடனான தோல்விக்குப் பின்னர் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி, ஒவ்வொரு போட்டியையும் கவனமாகவே எதிர்கொண்டு வருகிறது. முதல் 2 போட்டிகளில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆடும் லெவனைத் தேர்வு செய்த விராத் கோஹ்லி, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் தனது ஸ்டார் பவுலரான அஸ்வினுக்கு வாய்ப்பளித்தார்.
இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சம பலத்துடன் திகழ்கிறது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, யுவராஜ்சிங், டோனி என பேட்ஸ்மேன் பட்டாளம் பேட்டிங்களில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியும் முழு பலத்துடன் களமிறங்கும். இந்திய அணியுடனான தோல்விக்குப் பின்னர் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் எழுச்சிபெற்ற பாகிஸ்தான் அணியினர் தீவிர பயிற்சியில் உள்ளனர். இவ்விரு அணிகளும் முதல்முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை பைனலில் மோத உள்ளதால் இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இருப்பினும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக கோப்பை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.