மொகாலி: முதல் இன்னிங்சில் மிடில் ஆர்டர் கைவிட்டாலும், இந்திய பவுலர்கள் சிறப்பாக ஆடி அணி சந்தித்த திடீர் சரிவிலிருந்து மீட்டு இங்கிலாந்தைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றுக்கொடுத்தனர். இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து தடுமாறி வருகிறது.
மொகாலியில் நடைபெற்றுவரும் 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் முரளி விஜய் 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அதிரடி காட்டிய பார்த்திவ் பட்டேலும் 42 ரன்களில் வெளியேறினார்.
புஜாரா 51 ரன் எடுத்து கோஹ்லியுடன் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். ஆனால், அவருக்கு பிறகு உள்ளே வந்த ரஹானே, லெக் ஸ்பின்னர் அடில் ரஷித்தின், ராங் டெலிவரியை கவனிக்க தவறி எளிதான ஒரு எல்பிடபிள்யூவுக்கு அவுட்டானார்.
அறிமுக வீரர் கருண் நாயர் அருமையான ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்த நிலையில் ரன்அவுட்டானார். அதையடுத்து கோஹ்லியும் 62 ரன்களில் வெளியேற இந்திய அணி 148 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்து, 204 ரன்களுக்கு 6 விக்கெட் என்று திடீர் வீழ்ச்சியை சந்தித்தது.
அப்போதுதான் அணிக்கு கை கொடுத்தது அஸ்வின்-ரவீந்திர ஜடேஜா ஜோடி. எளிதில் இந்தியாவை மடக்கலாம் என நினைத்த இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடியின் இருவருமே அரை சதம் கடந்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 301 ஆக உயர்ந்தபோது அஸ்வின் 72 ரன்களில் அவுட்டானார்.
இதன்பிறகு 90 ரன்களில் ஜடேஜா வெளியேறி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இத்தொடரில் அறிமுகமான ஆப்-ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் அரை சதம் கடந்து 55 ரன்களில் அவுட்டானார். உமேஷ் யாதவ் 12 ரன்களில் வெளியேற, இந்திய இன்னிங்ஸ் 417 ரன்களில் நிறைவடைந்தது. எனவே முதல் இன்னிங்சில் இந்திய அணி 134 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. இதையடுத்து, இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
ஆனால் கேப்டன் அலஸ்டையர் குக்கை வழக்கம்போல வீழ்த்தினார் அஸ்வின். இம்முறை அவர் 12 ரன்களில் பௌல்ட் ஆனார். மொயின் அலி 5, ஜானி பெய்ர்ஸ்டோ 12, பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் நடையை கட்டினர். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபடி இருந்தது. அந்த அணியின் ஜோ ரூட் 36 ரன்களிலும், கரேத் பட்டி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய தரப்பில் அஸ்வின் 3, ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.