மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளிலும் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன்மூலம், யுவராஜ்சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதல் 3 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வரும் புதன்கிழமை, ராஞ்சியில் 4வது ஒருநாள் போட்டியும், சனிக்கிழமை, விசாகபட்டிணத்தில் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற அதே 14 பேர் கொண்ட குழுவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. டோணி (கேப்டன்&விக்கெட் கீப்பர்), விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ரஹானே, மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், ஜெயந்த் ஜாதவ், அமித் மிஷ்ரா, ஜஸ்ப்ரிட் பும்ரா, தவல் குல்கர்ணி, உமேஷ் யாதவ், மன்தீப் சிங், கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
2வது ஒருநாள் போட்டியில் எளிதில் செய்யப்பட வேண்டிய சேஸிங்கை இந்திய அணி கோட்டைவிட்டது. லோவர்-மிடில் ஆர்டரில் அனுபவமிக்க பேட்ஸ்மேன் இல்லாததன் பாதிப்பை அந்த போட்டியில் ரசிகர்கள் கூட உணர முடிந்தது. எனவே, கடைசி இரு போட்டிகளின்போது யுவராஜ்சிங்கிற்கும், காய்ச்சலில் இருந்து மீண்ட ரெய்னாவுக்கும் வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு, அதே அணியோடு களமிறங்கப் போகிறது பிசிசிஐ.
யுவராஜ்சிங்கை ஃபார்மில் இல்லை என காரணம் கூறி விலக்கி வைக்க முடியாது. ஏனெனில், சமீபத்தில்தான் ரஞ்சி போட்டியொன்றில் ருத்ர தாண்டவம் ஆடி, "நான் யார் என்று தெரிகிறதா.." என்று விஸ்வரூபம் காட்டினார் யுவராஜ்சிங். கடந்த 14ம் தேதி பன்சிலால் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக நடந்த ரஞ்சிக் கோப்பைப் போட்டியில், யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி 24 பவுண்டரிகளுடன், 177 ரன்களைக் குவித்தார்.
யுவராஜ் சிங்கின் இந்த சிறப்பான ஆட்டம் நிச்சயம் தேர்வாளர்களைக் கவர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யார் தடுத்தார்களோ தெரியவில்லை, யுவராஜுக்கு கல்தா கொடுத்துள்ளது பிசிசிஐ தேர்வுக்குழு. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில், ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சோடை போய்வரும் நிலையில், கோஹ்லி, டோணி மட்டுமே ஓரளவுக்கு பேட்டிங்கை தூக்கி நிறுத்தி வருகிறார்கள். மிடில் ஆர்டரில் இருந்து டெய்ல் என்ட்வரை பேட்டிங் குறைபாடு உள்ளது. அப்படியும் யுவராஜுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. எனவே யுவராஜ்சிங்கை அணியில் சேர்க்க யார் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஒருவேளே யுவராஜ் சிங் தந்தை, யோக்ராஜ் சிங் மீண்டும் வாய் திறந்தால் உண்மை வெளியே வரலாம்.