மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை கோச் யார் என்பது குறித்து நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும், அது குறித்து விராட் கோஹ்லியுடன் ஆலோசனை நடத்திய பிறகே இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்தின் போதிலிருந்தே கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் 7-ஆம் பொருத்தம்தான் இருந்தது.
இதைத் தொடர்ந்து லண்டனில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியுடன் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இந்திய அணியின் தலைமை கோச் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது.
இப்பதவிக்கு ரவி சாஸ்திரி, சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், ஃபில் சிம்மன்ஸ், லால்சந்த் ராஜ்புத், தொட்ட கணேஷ் ஆகிய 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்காணலை மும்பையில் சச்சின் (ஸ்கைப் மூலம் பங்கேற்றார்), கங்குலி, லட்சுமண் அடங்கிய இந்திய கிரிக்கெட் அறிவுரை குழு இன்று தொடங்கியது.
நேர்காணல் முடிவடைந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அறிவுரை குழுவின் உறுப்பினர் கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறுகையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் குகறித்து விராத் கோஹ்லியுடன் ஆலோசனை நடத்திய பிறகே அறிவிக்கப்படும்.
விராத் கோஹ்லி இதுவரை அப்பதவிக்காக யாரையும் பரிந்துரைக்கவில்லை. எனினும் தலைமை பயிற்சியாளர் தேர்வில் கேப்டனின் கருத்தும் முக்கியம் என்பதால் அவரிடம் ஆலோசனை செய்துவிட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றார் கங்குலி.