லார்ட்ஸ்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது இந்தியா.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்சிவர் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டெய்லர் 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து இந்திய அணிக்கு பூணம் ரவுட், ஸ்மிருதி மந்தனா ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினர். தொடக்கத்திலே ஷாக் காத்திருந்தது போல ஸ்மிருதி ரன் எடுக்காமல் டக் அவுட் முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் 17 ரன் எடுத்தபோது ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் இணைந்த பூணம் ரவுட், கவுர் ஜோடி நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபட்டது. இவர்களைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர்.
இங்கிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்த பூணம் ரவுட் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 115 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உதவியுடன் இந்த ரன்களை குவித்தார். இதனிடையே ஹர்மன்ப்ரீத் கவுர் 51 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி 35 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.
இறுதியில் 28 ரன்களுக்கு 7 விக்கெட்களை இந்திய அணி தொடர்ந்து பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 48.4 ஓவர்களில் 219 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 4வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.