செம பார்ம்
இந்தியா தற்போது நல்ல பார்மில் உள்ளது. வார்ம் அப் போட்டியில் இலங்கையை தூக்கிப் போட்டு மிதித்து அசத்தினர் இந்திய வீராங்கனைகள். அதேபோல கடந்த மாதம் நடந்த நான்கு நாடுகள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி அசத்தினர் நமது மகளிர்.
நம்பர் ஒன் மித்தாலி
இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் உலகின் நம்பர் 2 வீராங்கனை ஆவார். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனையும் இவர்தான். இது இவருக்கு 4வது உலகக் கோப்பைப் போட்டியாகும்.
ஜூலன் கோஸ்வாமி
இந்திய அணியில் உலகின் 3வது நிலை பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியும் இடம் பெற்றிருப்பது நமக்கு கூடுதல் பலமாகும். மேலும் அவர்தான் மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனையும் ஆவார்.
நாளை முதல் மோதல்
நாளை முதல் உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் முறையாக இந்தத் தொடரில் டிஆர்எஸ் முறை அமலுக்கு வருகிறது. நாளை தொடங்கி ஜூலை 23ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து
நாளை பிரிஸ்டலில் நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து இலங்கை மோதவுள்ளன. டெர்பியில் நடைபெறும் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும்.
நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா
1973ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது உலகக் கோப்பைப் போட்டித் தொடர். முதல் கோப்பையை இங்கிலாந்து பெற்றது. தற்போது நடப்புச் சாம்பியனாக இருப்பது ஆஸ்திரேலியா ஆகும். ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 முறை கோப்பையை வென்றுள்ளது.
நிறைவேறாத இந்தியக் கனவு
இந்தியா இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது துயரமானது. கடந்த 2005ம் ஆண்டு இறுதிப் போட்டி வரை இந்தியா முன்னேறி அசத்தியது. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.
பார்க்கலாம் இந்த முறையாவது கனவு நிறைவேறுகிறதா என்பதை.