இந்தியாவுக்கு முக்கியம்
நாளை தொடங்கும் ஒருதினப் போட்டி, இந்திய அணியைப் பொறுத்தவரை, 2019 உலகக் கோப்பை போட்டிக்கான அணியை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்களாக இது பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில், ஷிகார் தவான், ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்ய உள்ளனர். மற்ற எந்த இடத்தையும் விட, நான்காவது இடத்துக்குதான் தற்போது சரியான ஆளில்லாமல் உள்ளது. டெஸ்ட் போட்டியில் நிறைவாக விளையாடிய, கே.எல். ராகுல், நான்காவது வீரராக களமிறக்கப்பட உள்ளார்.
ராகுலுக்கு சோதனை
இதுவரை, 6 ஒருதினப் போட்டிகளில் மட்டுமே ராகுல் விளையாடியுள்ளார். அதுவும் ஓப்பனராக. தற்போது நடைபெற உள்ள தொடரில், அவரை, நான்காவது வீரராக களமிறக்கி சோதனை செய்து பார்க்க அணி தேர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக, 2016ல் நான்காவது வீரராக களமிறங்கியுள்ள ராகுல், 12 இன்னிங்சில், 397 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய சராசரி, 44.11.
நான்காவது வீரர் முக்கியம்
உள்ளூர் போட்டிகளுக்கும், சர்வதேச போட்டிகளுக்கும் வித்தியாசம் உள்ளது என்றாலும், 2019 உலகக் கோப்பைக்காக அணியை வலுப்படுத்த, நான்காவது வீரர் மிகவும் முக்கியம். மூன்றாவது வீரராக கேப்டன் விராட் கோஹ்லியும் 5வது வீரராக விக்கெட் கீப்பர் தோனி உள்ளனர். 7வது வீரராக களமிறங்கி கலக்குவதற்கு, புதிய ஆல்ரவுன்டர் ஹார்திக் பாண்டியா தயாராகி வருகிறார். அடுத்தது, 6வது வீரருக்கான தேர்வில், ரகானே, மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ் ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சு ஓகே
பந்து வீச்சில், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சுடன், கேப்டன் கோஹ்லியின் நம்பிக்கையை பெற்றுள்ள குல்தீப் யாதவும், இலங்கைக்கு எதிராக விளையாட உள்ளனர். இரண்டாவது ஸ்பின்னருக்கான தேர்வில் அக்சார் படேல், யூஸ்வேந்திர சாஹல் உள்ளார். இந்த இளம் வீரர்களுக்கு, இலங்கைக்கு எதிரான தொடர், உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெறுவதற்கான மிகப் பெரிய டெஸ்டாகும். இதில் யார் யார் தேர்ச்சி பெற போகிறார்கள் என்பதை, இந்த ஒருதின தொடர் முடிவு செய்யும்.
இலங்கைக்கும் மிக முக்கியம்
இலங்கைக்கும் இந்த ஒருதினப் போட்டித் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் இரண்டு ஒருதினப் போட்டிகளில் வென்றால்தான், 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் சூழ்நிலையில் இலங்கை உள்ளது. அவ்வாறு வென்றால், 90 புள்ளிகளுடன், உலகக் கோப்பைக்கு இலங்கை தகுதி பெற்றுவிடும்.
உபுல் தரங்காவுக்கு நேரம் சரியில்லை
தற்போது, 78 புள்ளிகளுடன் உள்ள வெஸ்ட் இன்டீஸ் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில், 6 போட்டிகளில் வென்றாலும், 88 புள்ளிகளையை பெறும். அதனால், உலகக் கோப்பைக்கு தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஆட வேண்டிய நிலை அதற்கு வரும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள், இவ்விரு அணிகளில் யார் நேரடியாக தகுதிச் சுற்றுக்கு போக உள்ளனர் என்பதை நிர்ணயிப்பதாக, இந்தியாவுடனான தொடர் அமைந்துள்ளது. ஆனால் கேப்டன் உபுல் தரங்கா தலைமையிலான அணிக்கு, புள்ளிவிபரங்கள் கூட சாதகமாக இல்லை.
அணிகள்:
இந்தியா : கோஹ்லி (கேப்டன்), சிகார் தவான், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், மணிஷ் பாண்டே, அஜிங்கியா ரகானே, கேதர் ஜாதவ், எம்.எஸ். டோணி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டயா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், சர்துல் தாகுர்.
இலங்கை: உபுல் தரங்கா (கேப்டன்), ஏஞ்சலோ மாத்யூஸ், நிரோஷன் டில்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனுஷ்கா குனதிலாகா, குஷால் மென்டிஸ், சமாஜா கபுகதெரா, மிலிண்டா சிரிவர்த்தனா, மலிந்தா புஷ்பகுமாரா, அகிலா தமஞ்சவா, லக் ஷன் சண்டகன், திசாரா பெரிரா, வாநிண்டு ஹசரங்கா, லசித் மலிங்கா, துஷ்மந்தா சமீரா, விஷ்வா பெர்னான்டோ.