கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி போராடி ஐந்தே ரன்களில் தோல்வியடைந்தது.
முதல் இரு போட்டிகளை இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது.
இந்தியா டாஸ் வென்று பவுலிங்கை தேர்ந்தெடுத்ததால், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 65 ரன்களும், ஜானி பெய்ர்ஸ்டோ 56 ரன்களும் விளாசினர். பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்ததாக பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 90 ரன்கள் எடுத்தார். 75 பந்துகளில் 12 பவுண்டரி, 1 சிக்சர் உதவியோடு அதிரடியாக ரன் குவித்து இந்தியாவை வெற்றிக்கு அருகே கொண்டு வந்த நிலையில், வோக்ஸ் பந்தில் சாம் பில்லிங்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் முதல் ஒருநாள் போட்டியில் கோஹ்லியுடன் இணைந்து சதம் விளாசியவர்.
பாண்ட்யா 56 ரன்கள் விளாசிய நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் கோஹ்லி 55, யுவராஜ்சிங் 45 ரன்கள் எடுத்திருந்தனர். டோணி 25 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜேக் பால் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பென் ஸ்டோக்ஸ் மேன் ஆப் தி மேட்ச் விருதையும், கேதர் ஜாதவ் மேன் ஆப் தி சீரிஸ் விருதையும் வென்றனர்.