தொடர்ந்த ஜோடி
நேற்றைய ஆட்ட நேர முடிவில், 248 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இன்று ஜடேஜா, விருதிமான் சாஹா ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தது. மீண்டும் ஒரு அழகான அரை சதம் விளாசிய ஜடேஜா 63 ரன்களில் பேட் கம்மின்ஸ் பந்தில் பௌல்ட் ஆனார்.
அவுட்டான ஜடேஜா
ஆப்-ஸ்டம்புக்கு வெளியே விழுந்து சற்றே உள்நோக்கி வந்த அந்த பந்தை விக்கெட் கீப்பருக்கே போகட்டும் என ஜடேஜா நினைத்திருந்தால் தப்பியிருக்கலாம். ஆனால் விளாசும் மூடில் இருந்த இடதுகை பேட்ஸ்மேன் ஜடேஜா அதை கவர் திசையை நோக்கி அடிக்க முற்பட பேட்டில் பட்ட பந்து இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்பை பதம் பார்த்தது.
அருமையான கேட்ச்
இதைத்தொடர்ந்து பேட் கம்மின்ஸ் பந்தில் ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் வெளியேறினார் விருதிமான் சாஹா. பந்தை அழுத்தமாக பிட்ச் செய்த கம்மின்ஸ் அதை சாஹாவின் தலையை நோக்கி இன் ஸ்விங் செய்தார். தலையை நோக்கி பாய்ந்து வந்த பந்திலிருந்து தப்பிக்க எக்குத்தப்பாக பேட்டை பிடித்தபடி குனிந்தார் சாஹா. பந்து பேட்டின் விளிம்பில் பட்டு எகிறியது. அதை சற்று பின்நோக்கி நகர்ந்து அற்புதமான ஒரு கேட்சாக மாற்றினார் ஸ்மித். பேலன்ஸ் தப்பி ஸ்மித் கீழே விழுந்தாலும் பந்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு சாஹாவை வழியனுப்பி வைத்தார்.
குல்தீப் யாதவ் கலக்கல்
புவனேஸ்வர்குமார் 6 பந்துகள் தாக்குப்பிடித்து 7வது பந்தில் வீழ்ந்தார். ஓ-கீபே பந்தை ட்ரைவ் செய்ய முற்பட்டு ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து புவனேஸ்வர் குமார் டக்அவுட்டாகி வெளியேறினார். 27 ஓவர்கள் வீசிய கீபேக்கு கிடைத்த ஒரே ஆறுதல் விக்கெட் இதுதான். மற்றொரு புறம் பந்து வீச்சில் கலக்கிய அறிமுக வீரர் குல்தீப் யாதவ் தனக்கு பேட்டிங்கும் பிடிக்க வரும் என்பதை நிரூபித்தார். கடைசி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவுடன் போராடியதால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் லயன் பந்தில் அவர் பவுண்டரி லைனில் ஹசில்வுட்டிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் அவரது பேட்டிங் ஸ்டைல் இந்தியாவுக்கு இன்னொரு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்பதை பறைசாற்றியது. உமேஷ் யாதவ் 2 ரன்களுடன் நாட்-அவுட்டாக நின்றார்.
விறுவிறுப்பு
ஆஸ்திரேலிய தரப்பில், ஆப் ஸ்பின்னர் நேதன் லயன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக பேட் கம்மின்ஸஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹசில்வுட் மற்றும் கீபே தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஜடேஜா 63, ராகுல் 60, புஜாரா 57 ஆகியோர் இந்திய தரப்பில் அரை சதம் கடந்த அதிகபட்ச ஸ்கோர்க்காரர்கள். உணவு இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. போட்டி இனி எந்த அணி பக்கம் வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.