மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
5ம் தேதி மும்பையில் உள்ள சி.சி.ஐ கிளப்பில் பயிற்சி மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியினர், பிறகு முதலாவது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட்டுக்கு செல்வார்கள்.
ராஜ்கோட்டில் நவம்பர் 9 முதல் 13ம் தேதிவரை முதலாவது டெஸ்ட் நடைபெறுகிறது. விசாகப்பட்டினத்தில் நவம்பர் 17-21 வரை 2வது டெஸ்ட் போட்டியும், மொகாலியில் நவம்பர் 26-30 வரை 3வது டெஸ்ட் போட்டியும், மும்பையில் டிசம்பர் 8-12 வரை 4வது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி சென்னையில் டிசம்பர் 16ம் தேதி முதல் 20வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இன்னும் குணமடையாததால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காயத்தால் ரோகித் ஷர்மாவுக்கும் வாய்ப்பில்லை. அவர் இடத்தை கருண் நாயர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் ஷிகர் தவானுக்கும் இடம் கிடைக்கவில்லை. அதேநேரம் ஒருநாள் போட்டிகளில் அவ்வப்போது தலை காட்டி வந்த ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதுதான் அவரது முதல் சர்வதேச டெஸ்ட் களமாக இருக்கப்போகிறது.
அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், செடேஷ்வர் புஜடாரா, அஜிங்ய ரஹானே, கருண் நாயர், கவுதம் கம்பீர், விருதிமான் சாகா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ்.
ஓப்பனிங் இடத்துக்கு முரளி விஜயுடன் கம்பீரை களமிறக்க வாய்ப்பாக அவர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் கம்பீருக்கு களம் காண வாய்ப்பு கிடைத்தது. கம்பீர் 2வது இன்னிங்சில் அரைசதம் அடித்து நம்பிக்கையை காப்பாற்றினார். சில தினங்களுக்கு முன்பு ரஞ்சி கிரிக்கெட்டில் ஒடிசாவுக்கு எதிராக 147 ரன்கள் விளாசி மீண்டும் தனது ஃபார்மை பறைசாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்குன் குனியா காய்ச்சலால் நியூசிலாந்து தொடரில் ஆட முடியாத இஷாந்த் ஷர்மா ,அதில் இருந்து குணமடைந்து ரஞ்சி போட்டியில் விளையாடினார். இதனால் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.