சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்று, 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
3-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 477 ரன் எடுத்தது. இந்தியா, கருண் நாயர், முச்சத உதவியோடு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 282 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை நேற்று ஆரம்பித்தது இங்கிலாந்து. இன்று மதியம் தேனீர் இடைவேளையின்போது அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. குக் 49 ரன்களிலும், ஜென்னிங்ஸ் 54 ரன்களிலும், ஜோ ரூட் 6 ரன்களிலும் ஜடேஜா பந்து வீச்சில் அவுட்டாகினர். ஜானி பெய்ர்ஸ்டோ இஷாந்த் பந்து வீச்சில் அவுட்டானார். ஆட்டத்தை டிரா செய்ய இங்கிலாந்து போராடிய நிலையில், தேனீர் இடைவேளைக்கு பிறகு நிலைமை மாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், 207 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட்டானது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாார வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இந்திய தரப்பில் ஜடேஜா அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.